Tuesday, March 19, 2013

தனி ஈழம் கோரி சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதம்!

இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம், இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு தண்டனை, கச்சத்தீவை திரும்பப் பெறுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் உண்ணாவிரதம் நடத்தினர். 

இலங்கைப் பிரச்சினையில் தமிழருக்கு ஆதரவான போராட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மாணவர்கள் ஆரம்பித்த இந்தப் போராட்டம் இப்போது மக்கள் போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது. இப்போது இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களும் கைகோர்த்துள்ளனர்.

வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொருளாளர் என் ரவி தலைமையில் சோளிங்கர் நகரில் மார்ச் 19-ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.  
 
இந்தப் போராட்டத்தில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் அதிமுக, திமுக, விடுதலைச் சிறுத்தைகள், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்று வாழ்த்திப் பேசினர். 

ரஜினி ரசிகர் மன்றத்தின் சோளிங்கர் ஒன்றிய பொறுப்பாளர் கோவன், மார்லின், பாண்டியன், நடராஜன், வெங்கடேசன் ஆகியோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

அதிமுக தலைமை கழக பேச்சாளர் சோமு மணி, திமுக வேலூர் மாவட்ட துணைச் செயலர் அசோகன், வேலூர் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலர் ரத்தின சுகுமார், பாஜக மாவட்ட துணை சுந்தரம், பாமக வக்கீல் சக்கரவர்த்தி, கவுன்சிலர்கள் ஏழுமலை, சேகர் உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தை வாழ்த்தி பேசினர். 


திரைப்பட கல்லூரி மாணவர்கள் உண்ணா விரத போராட்டம்

இலங்கை  தமிழர்களுக்கு ஆதரவாக, அவர்களின் வாழ்வுரிமையை  மீட்டு எடுக்க ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும், என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், இலங்கை மீது பொருளாதார் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு எடுதத  தீர்மானத்திற்கு ஆதரவாகவும், நாளை (20.03.2013) புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை  ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க திரைப்பட கல்லூரி மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் அரசு திரைப்பட கல்லூரியில் நடிப்பு, இயக்கம், ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு பயின்ற முன்னாள், இந்நாள் மாணவ-மாணவிகள் என 1000க்கும் மேற்பட்ட கலந்து கொள்கின்றனர்.  
அரசு திரைப்பட கல்லூரி வாயிலில் நடைபெறும் போராட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மாணவர்கள் ஆபாவணன், உளவுத்துறை ரமேஷ் செல்வன், சித்திரை செல்வன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் உண்ணாவிரதம்

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் சென்னையில் இன்று(19.03.2013)உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறறது. இதில் முப்பது சங்கங்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்