Friday, February 3, 2012

மதுபானக் கடை நடத்தும் அரசு தியேட்டர்களை எடுத்து நடத்தக் கூடாதா?


-மகான் கணக்கு பட இயக்குனர் ஆதங்கம் 
         
 துவரை யாரும் தொடாத கதை என்று பத்திரிகையாளர்கள் பாராட்டுகிறார்கள்.இத்தனை காலமாகியும் இப்படி ஒரு கதை தோன்றவில்லையே என்று  திரையுலகினர்  வியப்புடன் பாராட்டுகின்றனர். .பத்திரிகையாளர் காட்சியில் கூட 20  முறை கைத்தட்டல்கள் பெறுமளவுக்கு கலகலப்பான காட்சியமைப்புகள்.படம் பார்த்து விட்டு ரசிகர்கள் திருப்தியும் மகிழ்ச்சியும் தெரிவிக்கிறார்கள்.இத்தனைக்கும் காரணமான அந்த படம் 'மகான் கணக்கு'.முதல் படத்திலேயே சமூக அக்கறை கொண்டவராக தன்னை அடையாள படுத்தியிருக்கும் இயக்குனர் சம்பத் ஆறுமுகத்தை சந்தித்தபோது :
    
      
இந்த படத்தின் கரு உங்களுக்கு எப்படி தோன்றியது?
   
"நான் நேரில் சந்தித்த -பலரும் சொல்ல கேட்ட அனுபவங்கள் தான் இந்த பிரச்சினை .தனியார் வங்கி என்னும் கொள்ளைக்கூட்டம் கூப்பிட்டு கூப்பிட்டு கடன் கொடுத்து வசூல் செய்ய அவர்கள் செய்யும் அடாவடி இருக்கிறதே அந்த கொடுமைகள் சொல்லி மாளாது.கொஞ்சி கொஞ்சி பேசி கடன் கொடுத்து கடனாளியாக்கி மிரட்டி மிரட்டி அவமானப் படுத்துவார்கள்.கோயமுத்தூரில் 
ஒரு பெண்மணி டூவீலர் கடனில் வாங்கியுள்ளார்.அவர் கடன் கட்டவில்லை என்று இரவு நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்த  நேரத்தில் வண்டியை பிடுங்கி கொண்டு நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.வண்டியில் தான் பர்ஸ் ,டாக்குமெண்டுகள் எல்லாம் வைத்திருந்தார்.அவர் எவ்வளவு அவமானப் பட்டிருப்பார்.?இதுபோல் தினம் தினம் ஆயிரமாயிரம் நடக்கின்றன.
  ரிசர்வ் வங்கி விதிமுறைகளில் கடன் கொடுக்கும்  வங்கிகள் அந்த வங்கி அதிகாரிகள்  தவிர இடையிலுள்ள மூன்றாம் நபர் வசூலுக்கு செல்வதை வங்கி  விதிமுறை அனுமதிக்கவில்லை.இதையெல்லாம்  காற்றில் பறக்கவிட்டு  யார் யாரையோ கலெக்ஷன் ஏஜென்ட் என்று நியமித்து அனுப்புகிறார்கள்.அவர்களுக்கு எந்த தகுதியும் தேவையில்லை.ரவுடிகளாக,பொறுக்கிகளாக இருந்தாலும் பரவாயில்லை.அவர்களுக்கு தேவை பணம் வசூலாக வேண்டும்.
வீட்டுக்கு வந்து வசூல் என்கிற பெயரில் அடாவடி செய்கிறார்கள். கடன் வாங்கினான் என்பதற்காக ஒருவனை அவமானப் படுத்தவோ அவன் சுயமரியாதையை குலைக்கும் வகையில் செயல்படவோ யாருக்கும் உரிமையில்லை.கடன் கட்டவில்லை  என்றால்  வழக்கு ,நீதிமன்றம் என்று சட்டத்தில் எவ்வளவோ வழிகள் உள்ளன.
இந்த கலெக்ஷன் ஏஜெண்டுகளை நியமிப்பதில் வங்கிகள் எந்தவித குறைந்தபட்ச விதிகளை கூட பின்பற்றுவதில்லை.அதனால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது.இதையெல்லாம் நேரில் பார்த்து கேள்விப் பட்ட நான் என் முதல் படமாக இந்த கதையை ஏடுத்துக் கொண்டேன்.என் தயாரிப்பாளர் பூஜா பழனிச்சாமி அவர்களும் இதே மாதிரி கொள்கை கொண்டவர்.எடுத்தால்  நாட்டுக்கு நல்லது செய்யும் படமாக எடுப்பது  என்றிருப்பவர்.அவர் ஒரு கோடி ரூபாய் செலவில் ஒரு கோயில் கட்டினார்.அது தர்ம காரியம்.அதுபோலவே நாட்டுக்காக பல கோடி செலவு செய்து இந்த படத்தை எடுத்திருக்கிறார்."

 நீங்கள் சொல்வதை பார்த்தால் கடன் வாங்கியவர்கள் கட்டக்கூடாது என்று ஆகிவிடாதா?
      
  
 "கடன் வாங்க கூடாதுதான்.வாங்கினால் தகுதி பார்த்து வாங்க வேண்டும்.ஆனால் கடனை வழிய திணிக்கக் கூடாது.அவசியமில்லாத ஒருவனிடம் ஆசை  காட்டி அவனுக்கு கடன் சுமையை சுமத்துவதற்கும் விபச்சாரத்துக்கும் வேறுபாடில்லை.அப்பாவி மக்களின் பண பலவீனத்தைப்  பயன்படுத்தி இப்படி கடனாளியாக்குவது தவறு என்கிறேன்.ஒரு காலத்தில் கடன் வாங்குவது என்றால் அஞ்சுவார்கள்.சுமையாகிவிடுமே என்கிற கவலை,பயம் இருக்கும்.'கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று கம்பர் கூறியிருப்பது கடன் எத்தனை சுமையானது என்பதை காட்டத்தான்.இப்படி அவமானப் படுத்த வரும் ஏஜண்டுகளைப் பார்த்து பயப்படக் கூடாது.தரக்குறைவாக நடந்து கொண்டால்  கட்டி வைத்து அடிக்கலாம்.அக்கம் பக்கம் இப்படி நடந்தால் நமக்கென்ன என்று போக கூடாது.இன்றைக்கு அவர்கள்,நாளை நீங்கள்.."

இந்த படத்தின் மூலம் நீங்கள் பெற்ற பாடம்?

"நல்ல படம் என்று பத்திரிகை-ஊடகத்துறையினர் பாராட்டியது பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.படம் பார்த்தவர்களும் மன நிறைவாக உணருகிறார்கள்.கடன் சுமையில் தற்கொலை முடிவுக்கு போனவர்கள் எல்லாம் நம்பிக்கையாக இருக்கிறது என்று போனில் பேசுகிறார்கள்.தனியார் வங்கிகளால் பாதிக்கப்பட்ட சங்கங்கள் பாராட்டுகின்றன. முப்பது ஆண்டுகளாக தியேட்டர் ஆபரேட்டராக இருப்பவர் இப்படி ஒரு படம் பார்த்ததே இல்லை என்று போன் செய்தார்.கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா.பாண்டியன் படம் பார்த்துவிட்டு நீண்ட நேரம் பேசினார்.'நாட்டுக்கு தேவையான படம்' என்று பாராட்டினார்.'வெட்கமாக இருக்கு' என்று ஒரு பிரபல தனியார் வங்கி ஊழியர் வேலையை விட்டு விட்டதாக கூறினார்.
ஆனால் இவ்வளவு முக்கியமான படத்துக்கு திரையிட சரியான  தியேட்டர் கிடைக்கவில்லை என்பது வருத்தமாக உள்ளது.பெரிய நடிகர்கள் படம் வருகிறது என்கிறார்கள்.சிறிய படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. என்னெனவோ கூறுகிறார்கள்.தியேட்டர்களின் அதிகாரம் யார் கையிலோ இருக்கிறது.பெரிய நடிகர்களின் எல்லா படமுமா ஓடுகிறது? இத்தனை நாள் வசூல் செய்தவர்கள் ஒரு படத்தை சேவையாக எண்ணி நாட்டுக்காக இதற்கு தியேட்டர் கொடுத்தால் என்ன? இதற்காக நாங்கள் படு போராட்டம்,மதுபானக் கடைகளை நடத்தும் அரசாங்கம் தியேட்டர்களை ஏற்று நடத்தினால் என்ன? என்று கேட்க வைக்கிறது."

 படத்தின் இறுதிக் காட்சியில் அன்னா ஹசாரே தோன்றுவது பற்றி? அதில் அரசியல் உண்டா?

"இன்று அநியாயத்துக்கு எதிராகப் போராடும் ஒரு குறியீடாக இருப்பது அண்ணா ஹசாரே தான்.கட்சிகளுக்கு அப்பாற்ப்பட்ட மக்கள் ஆதரவு பெற்ற அவரைக் காட்டியதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை."

 அடுத்த படம் பற்றி?



"மகான் கணக்கு' படத்தை போல அடுத்தும் சமூக பிரச்சினை கொண்ட கதையை தான் படமாக்கப் போகிறேன்.இந்த படமும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும்.தற்போது கதை விவாதம் நடந்து வருகிறது. அடுத்த படம்ட்டுமல்ல ,நான் இயக்குகிற எல்லா படங்களிலும் மெசேஜும் இருக்கும்.கமர்சியலும் இருக்கும்."

No comments:

Post a Comment